சமாதானமான ராமதாஸ்.. நல்ல செய்தி வரும்னு சொல்லிவிட்டார்.. தீரன் சொன்ன தகவலால் பாமக தொண்டர்கள் குஷி!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் அரசியல் குழுத் தலைவர் தீரன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள மகளிர் மாநாடு பணிகளை கவனிக்க ராமதாஸ் வலியுறுத்தி உள்ளதாக கூறிய அவர், நண்பர் என்ற முறையிலேயே ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார் என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களை ராமதாஸ் அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்து வருகிறார். இதனால் பாமகவை கையில் எடுக்கும் முடிவில் அன்புமணி செயல்பட்டு வருகிறார்.

ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு
இதனிடையே நேற்று தைலாபுரம் வந்த அன்புமணி, ராமதாஸை சந்திக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ராமதாஸ் சந்திக்க விரும்பாததால், வேறு வழியின்றி புறப்பட்டதாக தெரிகிறது. அன்புமணி ராமதாஸ் புறப்பட்டு சென்ற பின், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் சென்று ராமதாஸை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
தைலாபுரத்தில் ஆலோசனை
இதனால் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் நேற்றிரவு பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் இன்று காலை ஜிகே மணி, பாமக அரசியல் குழு தலைவர் தீரன் உள்ளிட்டோர் தைலாபுரம் சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சமாதானம்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் செய்வதற்காகவே இந்த தொடர் சந்திப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் தைலாபுரம் இல்லத்தில் இருந்து வெளியில் வந்த பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் சமாதானம் ஏற்பட்டுள்ளது.
நல்ல செய்தி வரும்
நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ் கூறியதால் சமதானாம் என்றே எடுத்து கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள மகளிர் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தியை நண்பர் என்ற முறையில் தான் ராமதாஸ் சந்தித்தார். அப்பா, மகன் இடையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications