ஆத்தாடி.. கெட்டுப்போன 3 நாள் பிரியாணியவா சப்புக் கொட்டி சாப்பிட்டோம்..தெறித்து ஓடிய வாடிக்கையாளர்கள்
விழுப்புரம் : மூன்று நாட்களுக்கு முன்பு செய்த ஊசிப்போன பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு தந்து பிரபல பிரியாணி கடை சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தி அபராதம் விதித்துள்ளனர்
Recommended Video
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பலருக்கும் பிரியாணி என்றால் ஒரு அலாதி பிரியம் பிரியாணி மீது கொண்ட காதலால் ஊர் ஊராக சுற்றி விதவிதமாக பிரியாணி சாப்பிடும் உணவுப் பிரியர்கள் அதிகம்.
குறிப்பாக குறிப்பிட்ட கடைகளில் பிரியாணி என்றால் விரும்பி சாப்பிடும் பலர் அதனை வீடியோவாக எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், யூட்யூப்பிலும் பதிவிட்டு பேமஸ் ஆகியும் வருகின்றனர். புட்யூப் ஆதிக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.

பேமஸ் பிரியாணி
இப்படியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளின் பெயர்களை பரப்பி ,ஒரு குறிப்பிட்ட பிரியாணி கடையில் விற்கப்படும் பிரியாணியை மக்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடுவர். பல்லாவரத்தை தலைமையகமாகக் கொண்ட அந்த நிறுனத்திற்கு பல்வேறு கிளைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ளது. அந்த பிரியாணியின் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு பேமஸ் இந்த பிரியாணி கடை. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திறக்கப்பட்ட அந்த பிரியாணி கடையின் கிளைக்கு பிரியாணி சாப்பிட வழக்கறிஞர் ஒருவர் வந்துள்ளார்.

கெட்டுப்போன பழைய பிரியாணி
ஆர்வத்தோடு பிரியாணி சாப்பிட அமர்ந்த அவருக்கு கடும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. வழக்கறிஞருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியின் சுவை படுமோசமாக இருந்ததோடு இறைச்சியிலும் கெட்ட வாடை வீசியுள்ளது. சாப்பிடும்போதே குமட்டிக் கொண்டு வந்தது. பிறகு தான் தெரிந்தது அது மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்டு ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த பிரியாணி என்பது. தனக்கு பரிமாறப்பட்ட பிரியாணி மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்டது என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழக்கறிஞர் கடை உரிமையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடும் வாக்குவாதம்
இதன் காரணமாக அங்கு பிரியாணி சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியும் பழையதாக இருக்குமோ என்ற பயத்தில் அப்படியே வைத்து விட்டு, கைகளை கழுவி விட்டு பில்லையும் கட்டி விட்டு நடையை கட்டினர். தொடர்ந்து கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இது குறித்து உணவகத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் பேச முற்பட அங்கு கூட்டம் கூடியது.கடையினை திறந்து சில நாட்கள் தான் ஆகிறது என்றும், தயவு செய்து இதை பெரிதாக்க வேண்டாம் என கடையின் உரிமையாளர் கையெடுத்து கும்பிட்டும் கேட்காத வழக்கறிஞர் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகள் சோதனை
விவகாரம் பூதாகரமாக தொடர்ந்து அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு வந்து உணவினை பரிசோதனை செய்து பார்த்தபோது பிரியாணி கெட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 நாட்களுக்கு முன்பு சமைத்த பிரியாணியை பொதுமக்களுக்கு பரிமாறிய பிரியாணி கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே புகார் மற்ற பகுதிகளில் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழுப்புரத்தில் பல்வேறு கடைகளிலும் ஆய்வு நடத்தினர். பிரபல பிரியாணி கடையில் கெட்டுப்போன பிரியாணி பரிமாறப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications