பாமகவிலிருந்து அன்புமணி நீக்கமா? சீலிடப்பட்ட கவரில் என்ன இருக்கிறது? செப்.3 ல் அறிவிக்கிறார் ராமதாஸ்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு சீலிடப்பட்ட கவரில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதில் என்ன இருக்கிறது என்பதை வரும் 3ஆம் தேதி அவர் அறிவிப்பார் என்றும் எம்எல்ஏ அருள் தெரிவித்தார்.
பாமகவில் இளைஞரணி தலைவராக காந்திமதியின் மகனும் தனது பேரனுமான முகுந்தனை ராமதாஸ் நியமித்திருந்தார். இதற்கு அன்புமணி அதே மேடையிலேயே எல்லார் முன்பும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தன்னை சந்திக்க வருவோர் பனையூர் அலுவலகத்திற்கு வரவும் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

இதைத் தொடர்ந்து பாமக மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். தாயை தாக்கியவர், தகப்பன் பேச்சை கேட்காதவர், ஒட்டுக்கேட்பு கருவியை பொருத்தியவர் என தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
மேலும் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவதென்றால் அவர் கட்சியில் நீடிக்கலாம். அவருக்கு விருப்பம் இல்லாவிட்டால் விலகலாம் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் "நானே தலைவர்" என கூறி கொண்டு நிர்வாகிகளை நீக்குவது நியமிப்பதுமாக இருந்தனர்.
மேலும் பொதுக் குழு கூட்டத்தையும் தனித்தனியே கூட்டி சில தீர்மானங்களையும் நிறைவேற்றினர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் கூடிய பாமக பொதுக் குழுவில் ராமதாஸை எதிர்த்தது, பனையூரில் தனி அலுவலகம் வைத்தது, சமூகவலைதளங்களில் ராமதாஸை அவதூறாக பேச வைத்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது வைக்கப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி உள்ளிட்டோர் எந்த விளக்கத்தையும் தரவில்லை. அவர்களுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதா அல்லது அவருக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறிப்பதா என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தைலாபுரத்தில் நடந்த கூட்டம் நிறைவடைந்து அங்கு நடந்தது என்ன என்பது குறித்து எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு பதில் அளிக்காத அன்புமணி மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நிர்வாகிகள் குறிப்பிட்டு அதை சீலிடப்பட்ட கவரில் கொடுத்துள்ளோம். அந்த நடவடிக்கை என்ன என்பதை செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு உங்களிடம் (ராமதாஸ்) தெரிவிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications