"நான் சாகவில்லை, உயிருடன் இருக்கேன்" அன்புமணிக்கு பாமக எம்எல்ஏ அருள் பதிலடி! பொறுப்பை அளித்த ராமதாஸ்
விழுப்புரம்: இறந்தவர்களுக்கு தான் கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள், நான் இன்னும் சாகவில்லை என்று பாமக எம்எல்ஏ அருள், அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாமகவில் ராமதாஸ் சொல்வதே தங்களின் முடிவு என்று அருள் கூறிய நிலையில், அவருக்கு இணை பொதுச் செயலாளர் பொறுப்பு அளித்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், தலைவர் பதவியை தாமே வைத்து கொள்வதாக அறிவித்தார். இதன்பின் இருவருக்கு இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், பாமகவில் யாருக்கு அதிகாரம் என்ற சூழலில் நிற்கிறது.

அன்புமணி கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழுவை நடத்தி வரும் அன்புமணி, தனக்கே நிர்வாகிகள் ஆதரவு என்று கூறி வருகிறார். அதேபோல் ராமதாஸ் புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். இதனிடையே சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்.
கிண்டல் செய்த அன்புமணி
அப்போது சேலம் மேற்கு மாவட்ட எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சேலம் பொதுக்குழு கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்ப அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார். இதனால் நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
ராமதாஸ் ஆலோசனை
அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கவே எம்எல்ஏ அருள் இப்படி செய்தார் என்று அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறினர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். அதில் பங்கேற்க எம்எல்ஏ அருள் தைலாபுரம் வந்தார்.
பாமக எம்எல்ஏ அருள் பேட்டி
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அருள் பேசுகையில், ராமதாஸ் சொல்வதே எங்களின் முடிவு. இருவரும் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் நடக்கும். அன்புமணி எனக்கு அண்ணன் போன்றவர். உடல்நலம் பாதித்து சிகிச்சையில் இருந்த போது அன்புமணி நலம் விசாரிக்கவில்லை. கூட்டு பிரார்த்தனை என்பது இறந்தவர்களுக்கு செய்வார்கள்.
நான் சாகவில்லை
நான் இன்னும் சாகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன். அன்புமணி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தவிர்ப்பதற்கு யாராவது மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுப்பார்களா? நான் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தேம். அதன் பரிசோதனை முடிவுகள் மருத்துவமனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பு
தொடர்ந்து பாமக எம்எல்ஏ அருளுக்கு, இணை பொதுச் செயலாளர் பதவி அளித்து ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் பேசுகையில், அருளுக்கு இமயமலை அளவிற்கு பொறுப்பு கொடுத்துள்ளோம். அருள் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என்று கூறியுள்ளார். இதனால் அன்புமணி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications