அன்புமணி மீதான ஊழல் வழக்கு.. சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.. கொந்தளித்த ராமதாஸ்!
விழுப்புரம்: எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக என்பது நான் வளர்த்த ஆல மரம் என்று கூறிய ராமதாஸ், அன்புமணி பாமக தலைவர் என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடந்த பாமக நிர்வாகக் குழுவில், அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்திலேயே இருந்து வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், இரு தரப்பும் தங்களின் மோதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பாமகவின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை இருவரும் நாடினர். அதன்பின் டெல்லி நீதிமன்றத்தையும் நாடினார்.

இதனால் பாமகவின் மாம்பழ சின்னம் கடைசி நேரத்தில் முடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு தரப்பும் தேர்தல் பணிகளையும் தொடங்கியுள்ளன. அன்புமணி தரப்பு பாமக சார்பாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதேபோல் ராமதாஸ் தரப்பில் பாமக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசியல் வரலாற்றிலேயே நடந்திடாத ஒரு புதுமை நடந்து வருகிறது. அன்புமணி என் பெயரை சொல்லி, என் படத்தை போட்டு, பாமகவின் கொடியை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. அதனால் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புமணி பம்மாத்து வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அன்புமணி வாயைத் திறந்தாலே பொய் தான். கூட்டணி பேசுவதற்கு இந்த நிர்வாகக் குழு எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. இதன்பின் செயற்குழு, பொதுக்குழு அதிகாரம் கொடுக்க வேண்டும். பாமகவின் பொதுக்குழு டிசம்பர் 28ஆம் தேதி சேலத்தில் நடைபெறும். நாங்கள் ஜனநாயக முறைப்படி பாமகவை வளர்த்து நடத்தி வருகிறோம்.
.... கையில் கிடைத்த பூமாலை என்று சொல்வார்கள். அன்புமணிக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தக் கட்சியை உருவாக்கிய நான் தான் சொல்கிறேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு பயணித்து பாமகவை உருவாக்கினேன். ஆலமரமாக பாமகவை உருவாக்கினேன். இன்று அந்த ஆலமரத்தையே வெட்டப் பார்க்கிறார்கள். இத்துடன் அன்புமணி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புமணியின் பருப்பு எங்கும் வேகாது.. அரசியலில் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். சாமானிய மக்கள் திட்டுவதை அன்புமணி கண்டுகொள்வதில்லை. அன்புமணி பாமக தலைவர் என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்ல. இவர்கள் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில், அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications