துரைமுருகனுக்கு கரண்ட் கட்டுன்னா மட்டும் ஆக்ஷனா?.. அப்போ மக்கள்!.. கொந்தளித்த பிரேமலதா!
விழுப்புரம்: அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மட்டும் மின்தடை ஏற்பட்டதற்கு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தீர்களே, பொதுமக்கள் எத்தனை முறை மின்தடை என புகார் கூறியிருந்திருப்பார்கள்! அப்போதெல்லாம் என்ன நடவடிக்கையை நீங்கள் எடுத்தீர்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பிரேமலதா பேசினார்.
அவர் பேசுகையில் தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்தான் விஜயகாந்த். ஆட்சிக்கு தேமுதிக வரவில்லை என்றாலும் ஆட்சியில் இருப்பவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் தான்.

மின்வெட்டு
தமிழகத்தில் ஒரு பக்கம் மின் வெட்டு பிரச்சனை, மறு பக்கம் மின் கட்டணம் உயர்வு பிரச்சினை நிலவுகிறது. அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டதால் உடனே பொறியாளரை பணியிடை நீக்கம் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மின் வெட்டால் மக்கள் பாதிப்புள்ளாகி வரும் போது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பொய்யான வாக்குறுதிகள்
எண்ணிலடங்காத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிரூபித்துள்ளது. தமிழகத்திலுள்ள கட்சிகள் கூட்டணி அமைக்காமல் பணம் கொடுக்காமல் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? தேமுதிக போட்டியிட தயாராக உள்ளது. எங்களை போன்று போட்டியிட தயாரா.

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்புவது அதுவும் ஒரே அமைச்சர் வீட்டிற்கு பத்து முறை ரெய்டு அனுப்புகிறார்கள். மக்கள் முதல்வர் என கூறிக்கொள்ளும் ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால் தங்களது அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிரூபியுங்கள். வீடு வீடாக பணம் கொடுத்து திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

தடுப்பணைகள்
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் தடுப்பனைகள் கட்டுவோம் என கூறி ஒரு தடுப்பனையை கூட திமுக கட்டவில்லை. திமுக, அதிமுக ஆட்சியில் எந்த அணையும் கட்டப்படவில்லை. ஆட்சிகள் தான் மாறுகின்றன. காட்சிகள் மாறவில்லை, பொன்முடி எப்படித்தான் உயர்கல்வி துறை அமைச்சராக ஆனார் என தெரியவில்லை. இன்று தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரிகளில் அருகில் தான் அதிகளவு கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மீது பழி
எதை கேட்டாலும் மத்திய அரசு மீது பழி போடும் அரசாகவும் மக்களை ஏமாற்றும் அரசாகவும் திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு காரணம் திமுக, அதிமுக. டாஸ்மாக்கை மூடுவதாக திமுக வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு ஆயிரம் கொடுப்பதாக கூறிவிட்டு மாணவிகளுக்கு கொடுப்பதாக திமுக அரசு ஏமாற்றுகிறது. கெஜ்ரிவால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறார் அவரிடம் ஊழல் இல்லா ஆட்சி நடத்தவதற்கான அட்வைஸ்சை கேட்டு ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டும்.

சென்னை சீரழிப்பு
கிழியாத சட்டையை போட்டுகொண்டு எதிர்க்கட்சி தலைவராக போட்டோ ஷூட் நடத்திய ஸ்டாலின், தற்போது கோட் சூட் போட்டு போட்டோ ஷூட் நடத்துகிறார். சிங்கப்பூருக்கு இணையான சென்னை என கூறி சீரழிக்கும் வேலையை தான் திமுக செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications