பாமகவில் கட்சியும் நானே.. தலைவரும் நானே.. அனுமதியின்றி அன்புமணி பயணம் போகக்கூடாது.. ராமதாஸ் அதிரடி!
விழுப்புரம்: பாமகவில் கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனது அனுமதி இன்றி அன்புமணி பயணம் மேற்கொள்வதால் தடை கோரியுள்ளதாகக் கூறிய ராமதாஸ், அன்புமணி தலைமையில் பாமகவில் அணி என்பதே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நாளை முதல் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனிடையே பாமக பெயர், கொடியைப் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ராமதாஸ் பேசுகையில், பூம்புகார் மகளிர் மாநாட்டை ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ளோம். இந்த சமயத்தில் சென்னையில் உள்ள பாமக கட்சித் தலைமை அலுவலகம் மே 20, 2025 முதல் தைலாபுரம் தோட்டத்திலேயே இயங்கி வருகிறது.
சென்னை அல்லது வேறு பகுதியில் வேறு எங்கும் யாரும் பாமக தலைமை அலுவலகத்தை வைத்திருந்தால், அது சட்டத்திற்குப் புறம்பானது. பனையூரில் பாமக தலைமை அலுவலகம் இருப்பதாகச் சொல்வது சட்டவிரோதமானது. அதேபோல் பாமகவின் தலைவர் என்று யாராவது கூறிக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் அன்புமணி செயல் தலைவராகத் தொடர்வார்.
பாமகவில் தாங்களாக நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொறுப்பாளர்களின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாமக பெயரையோ, கொடியையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது. என்னிடம் அன்புமணி உரிமை மீட்பு பயணம் செல்ல அனுமதி பெறவில்லை.
அதனை எதுவும் அன்புமணி செய்யவில்லை. ஏற்கனவே அன்புமணி பெயருக்குப் பின் என் பெயரைப் போடக் கூடாது என்று சொல்லி இருக்கிறேன். அதனால் அன்புமணி நாளை தொடங்கும் உரிமை மீட்பு பயணத்திற்கு போலீஸ் தடை விதிக்க வேண்டும். அன்புமணி பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் செய்யாத செயலை எனக்கு செய்திருக்கிறார்கள்.
நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்பு கருவியை வைத்துள்ளனர். ஒட்டுக்கேட்பு கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரில் இருந்து வாங்கப்பட்டிருக்கலாம். எதற்காக ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்கள் என்று எனக்குத் தெரியும். அதனைக் கூற விரும்பவில்லை. அன்புமணி தலைமையில் அணி என்பதே கிடையாது. பாமக கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications