என் மூச்சு இருக்கும் வரை.. அன்புமணியுடன் சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை.. ராமதாஸ் ஆவேசம்!
விழுப்புரம்: என் உயிர் இருக்கும் வரை அன்புமணியுடன் இணையும் பேச்சிற்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனக்கு பின் பாமகவை வழிநடத்த மகள் ஸ்ரீகாந்தியை தயார் செய்து வருவதாக கூறிய ராமதாஸ், அரசியலில் தாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் 37 தொகுதிகளில் பாமக ராமதாஸ் பிரிவு களமிறங்கி இருக்கிறது. அதில் பாமக அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 தொகுதிகளில் 12 தொகுதிகளில் ராமதாஸ் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறார். இருப்பினும் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட சில வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கி இருக்கின்றனர். இதற்கு அன்புமணியே காரணமாக இருக்கிறார்.

விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, மயிலாடுதுறை சக்திவேல், திருப்போரூர் பொற்செழியன், நெய்வேலி ஜெகன், விருத்தாசலம் சுரேஷ் உள்ளிட்டோர் பின்வாங்கி உள்ளனர். இருந்தாலும் ராமதாஸ் தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள சிட்டிங் எம்எல்ஏ அருள், தர்மபுரி சரவணன், ஜெயங்கொண்டம் ரவி, செஞ்சி கனல் பெருமாள் உள்ளிட்டோர் கடுமையான போட்டி அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
பாமகவின் அடையாளமான மாம்பழம் சின்னத்திற்கு எதிராகவே ராமதாஸ் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில், பாமகவை உருவாக்கியது நான் தான்.. ஒவ்வொரு செங்கலாக வீடு கட்டுவது போல் ஒவ்வொரு கிராமமாக நடந்து கட்சியை வளர்த்தேன். மாம்பழம் சின்னம் எங்கள் தரப்புக்கு சொந்தமானது. அதற்கானவே நீதிமன்றத்தை நாடினோம்.
கட்சியை உருவாக்கிய நான், கட்சி உடைவதை பார்க்கும் போது வலி கொடுக்கிறது. பணம் இருந்தால் இப்போது எல்லாமே சாத்தியம்.. காசேதான் கடவுளடா என்பார்கள்.. அதுபோல் பலரையும் அன்புமணி வாங்கிவிட்டார். அதேபோல் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். நாங்கள் தான் திமுகவிடம் பேசினோம். திமுக தரப்பில் எங்களை யாரும் அணுகவில்லை.
இந்த தேர்தல் முடிவுகளை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் கிடையாது. மூத்த அரசியல்வாதியாக நான் இருந்தாலும், எதையும் இப்போது கணிக்க முடியாது. அதேபோல் அரசியலில் அனைத்து தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைக்க முடியாது. ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக சோகம் அடைவார்கள். சசிகலாவுடன் கூட்டணி அமைத்தது அந்த வகையில் தான்.
அதேபோல் அன்புமணியுடன் மீண்டும் இணைப்பு என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. என்னுடைய உயிரே போனாலும் சரி.. என்னுடைய மகள் ஸ்ரீகாந்தியை தயார் செய்து வருகிறேன்.. எனக்கு பின் கட்சி அவரிடம் தான் இருக்கும்.. அவர் தான் கட்சியை வழிநடத்தி செல்கிறார். எனக்கு பின், ஸ்ரீகாந்தி பாமகவை நிச்சயம் சிறப்பாக வழிநடத்துவார்.
எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறினேன். ஆனால் அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். அரசியலில் ஏராளமான தவறுகளை செய்துவிட்டேன். அந்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications