பிரபாகரனுடன் இருந்த போட்டோ எடிட் செய்யப்பட்டதா? "அத விடுங்க"! இறுக்கமாக பதில் அளித்த சீமான்
விழுப்புரம்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அத விடுங்க என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். அந்த பதிலை சொல்லும் போது அவர் முகம் விரக்தியிலும் சோகத்திலும் இருந்தது போல் இருந்தது.
விழுப்புரம் அருகேயுள்ள பூரி குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கள் விடுதலை இயக்க தலைவர் நல்லசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பனைமரத்திலிருந்து கள் இறக்கி பனைமரத்திற்கு படையலிட்டு வணங்கினர். அதைத் தொடர்ந்து சீமான் கள்ளை பனை ஓலையில் ஊற்றி பருகினார். கள் இறக்கினால் ஒரு லட்சம் அபராதம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை சட்டத் திருத்தம் நிறைவேற்றியது கண்டனத்துக்குரியது என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தேர்தல் களம் எங்களுக்கானது என்றுதான் நாங்கள் நினைப்போம். எந்த களமாக இருந்தாலும் எங்களுடையதாக மாற்றுவதுதான் எங்களது களப்பணி. திமுகவை எதிர்த்து நான் ஒருவன்தானே நிற்கிறேன். நீங்கள் இத்தனை அமைச்சர்கள், இத்தனை கட்சிகளை கூட்டணியாக வைத்துக் கொண்டு எதற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறீர்கள்.
பெரியார் என பேசும் பெருமக்கள் பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரைப் பேசியே வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார். அவருக்கு ஓட்டு போடாதீங்கள் என ஒரு முறை பேசுங்களேன். பெரியாரைச் சொல்லி வாக்கு வாங்கப் போகிறீர்களா? காந்தி படத்தை காட்டி வாக்கு வாங்க போறீங்களா என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் அவரிடம் பிரபாகரனுடன் இணைந்து எடுத்ததாக கூறப்படும் படம் கிராபிக்ஸ் என சொல்லப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்கு அவர் "அதவிடுங்க" என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஒற்றை வரியில் கூறினார்.
வெங்காயம், பயாஸ்கோப் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை பார்த்து வந்தேன். அப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன்.
அப்போது சில டிவிடிகளை கொடுத்து சீமான், பிரபாகரன் அருகருகே இருப்பது போல் படம் வேண்டும் என கேட்டனர். நான் எதற்கு என கேட்டதற்கு, சீமானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என சொன்னார்கள். அதனால் நான் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து கொடுத்தேன்.
பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக சில தகவல்கள் உலா வந்த போது நான் இதுகுறித்து செங்கோட்டையனிடம் கேட்டேன். அதற்கு அவர் நாம் போட்ட புகைப்படத்தால் ஒரு அரசியல்வாதி உருவாகிவிட்டார் என சந்தோஷமாக கூறினார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறினார். அதனால்தான் நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பெரியார் குறித்து சீமான் உண்மைக்கு புறம்பான கருத்துகளை பேசியதால்தான் நான் இப்போது இந்த உண்மையை சொன்னேன் என சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications