கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜி காரணம் என கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர்
விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.
பொதுவாக ஒரு நடிகர் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கிறார்கள். அதுவும் தனக்கு பிடித்த புகழ் பெற்ற உச்ச நடிகர்கள் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பை வைத்து அவரை பார்க்க எத்தனை நேரம் காத்திருக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி அன்பின் மிகுதியில் இருக்கும் ரசிகர்கள், அவர்களுக்காக பல முட்டாள்தனங்களையும் செய்கிறார்கள்.

இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள்.
விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்..
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications