திருவிழா- தலித்துகளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஒட்டனந்தல் ஜாதி பஞ்சாயத்து!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனந்தல் கிராமத்தில் திருவிழா நடத்தியதால் ஒரு ஜாதியினர் முன்பு தலித் பெரியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடுமை குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் தலித் சமூகத்தினர் அண்மையில் திருவிழாவை நடத்தி இருக்கின்றனர்.

தலித்துகள் திருவிழா
முன்னதாக தங்களது அனுமதி இல்லாமல் தலித் மக்கள் திருவிழா நடத்துவதாக போலீசில் மற்றொரு ஜாதியினர் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒட்டனந்தல் தலித் மக்கள் காவல்நிலையம் சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

ஜாதி பஞ்சாயத்து
இந்நிலையில் தங்களது அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியது குற்றம் என கூறி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த ஒரு ஜாதியினர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியதால் அதை முன்னின்று நடத்தியவர்கள் பஞ்சாயத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்தனர்.

மன்னிப்பு கேட்க வைத்த கொடூரம்
இதனையடுத்து திருவிழாவை நடத்திய ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த 3 பெரியவர்கள் மற்றொரு ஜாதியினர் கூட்டிய பஞ்சாயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரிக்கை
இந்த கொடூரமான பஞ்சாயத்து தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் கடுமையான விவாதப் பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications