பாராட்டை பெறும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருமா?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் கர்ப்பிணி மகளிர் காவலர்களுக்கு, கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பு விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருப்பது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பை விட இரண்டாவது அலை ஏற்படுத்தி வரும் பாதிப்பு மிக அதிகம். இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை 2,67,246 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,54,95,346-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய அளவில் 4,530 பேர் இந்தக் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவிலேயே கொரோனா தொற்று தினசரி அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உச்சபட்சமாக 33.059 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்மைவிட உச்சத்தில் இருந்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்த்ரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு குறைந்துவிட்டது.
வெளியில் செல்லக்கூடாது
எனவே தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வெளியில் செல்வதை தவிர்ப்பதும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதுமே சரியான செயல் ஆகும். இந்தக் கொரோனா பெரும் தொற்றால் பொதுமக்கள் மட்டுமன்றி, முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், காவலர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் கொரோனா பாதிப்பை தடுக்க தங்கள் உயிரையும் கொடுத்துள்ளனர்.
கர்ப்பிணி காவலர்கள்
அண்மையில் மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் கர்ப்பிணி மருத்துவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், கர்ப்பமாக இருக்கும் விழுப்புரம் மாவட்ட பெண் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏன் இந்த அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் காவலர்களில் யார் யாரெல்லம் இப்போது கர்ப்பமாக உள்ளார்களோ அவர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்து மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலம் முடியும் வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே கொரோனாவால் ஒருவேளை கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் அவர்களையும் வயிற்றில் வளரும் குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கும். எனவேதான், தமிழகத்திற்கே முன்னுதாரணமாக கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு சிறப்பு விடுப்பினை நேற்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது,
முதல்வர் அறிவிப்பாரா?
விழுப்புரம் எஸ்பியின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கர்ப்பிணி காவலர்களுக்கு இந்த பெருந்தொற்று காலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.