விழுப்புரத்தில் ஆச்சரியம்..கனவில் வந்த முருகன்..திண்டிவனம் இளம்பெண் கூறிய இடத்தில் 5.5 அடி உயர சூலம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே எண்டியூர் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் கனவில் தோன்றியதாக கூறிய இடத்தில் ஐந்தரை அடியில் சூலம் இருந்தது. காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் முருகன் சிலை மற்றும் சூலம் மண்ணில் புதைந்து இருப்பதாகவும், அதை தோண்டி எடுத்து வழிபாடு நடத்துமாறு கனவு வந்துள்ளதாம். அதன்படியே அங்கு சென்றால் சூலம் இருந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்த மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
சிலருக்கு கடவுள் கனவில் வந்து, சிலை இருப்பதாகவும், பூஜை செய்து வழிபடுங்கள் என்றும் கூறியதாக நீங்கள் அந்த காலத்தில் பல்வேறு கோயில்களின் கதைகளை கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு சம்பவம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் புவனேஸ்வரிக்கு 20 வயது ஆகிறது.

நள்ளிரவில் வந்த கனவு
இவருக்கு கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் கனவு வந்துள்ளது. அதில், காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் முருகன் சிலை மற்றும் சூலம் மண்ணில் புதைந்து இருப்பதாகவும், அதை தோண்டி எடுத்து வழிபாடு நடத்துமாறும் கனவு வந்திருக்கிறதாம். இதுகுறித்து கிராமத்தினரிடம் புவனேஸ்வரி கூறினாராம்.
வேல் எடுத்து ஆடிய பெண்
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள், அதே ஊரில் உள்ள முருகன் கோவிலில் திரண்டனர். முருகனுக்கு பூஜை செய்தபோது, பம்பை, உடுக்கை இசைத்துள்ளார்கள். அப்போது புவனேஸ்வரிக்கு திடீரென சாமி வந்துள்ளது. அவர் சாமி ஆடியபடி, முருகன் கோவிலில் இருந்து வேல் எடுத்துக்கொண்டு குளத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஓரிடத்தில் வேலை குத்தி, அந்த இடத்தில் தோண்டுமாறு சாமியாடியபடி கூறினாராம்.
5.5 அடி உயரமுள்ள சூலம் இருந்தது
அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் 7 அடி பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு மிகவும் பழமையான சூலம் கண்டெடுக்கப்பட்டது. 5.5 அடி உயரமுள்ள அந்த சூலத்தை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார்கள். பின்னர் அந்த சூலத்துக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து முருகன் கோவிலில் வைத்திருக்கிறார்கள். மேலும் அதே இடத்தில் முருகன் சிலை உள்ளதா? என பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. 10 அடி தோண்டியபோது, ஊற்றுநீரால் பள்ளம் நிரம்பியது. இதனால் பள்ளம் தோண்டும் பணியை பாதியில் பொதுமக்கள் நிறுத்தினார்கள்.
மீண்டும் முருகன் சிலையை தேடிய மக்கள்
நேற்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய மக்கள், புவனேஸ்வரியை அழைத்துள்ளனர். அப்போது மீண்டும் சாமி ஆடிய புவனேஸ்வரி, கோவிலில் இருந்து வேலை எடுத்துக்கொண்டு குளத்திற்கு மீண்டும் ஓடிச்சென்றார். அங்கு ஏற்கனவே சூலம் கிடைத்த இடத்தின் அருகில் வேலை குத்தி, இந்த இடத்தில்தான் முருகன் சிலை இருப்பதாகவும், இந்த இடத்தில் தோண்டுமாறும் கூறியிருக்கிறார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்தது. இப்படியாக அந்த பகுதியில் முருகன் சிலையை தேடும் பணி நடந்தது.இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications