வெளிநாட்டு வேலை.. ஏமாற்றி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை.. கதறும் இளைஞர்! வீடியோ
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளதால் அந்த இளைஞர் பெற்றோருக்கு போன் செய்து தன்னை காப்பாற்றும்படி கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது இலட்சியம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவரின் மூத்தமகன் டிப்ளமோ என்ஜினீயர் மனோஜ்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அருகிலுள்ள தென்தொரசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவர் ஏமாற்றி சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ரூபாய் ஒரு லட்சம் பணம் பெற்றுக்கொண்டு டூரிஸ்ட் விசாவில் அழைத்து சென்றுள்ளார்.

பாலைவனத்தில் சோறு
அங்கு சென்று மனோஜிக்கு ஒரு மாதம் ஓட்டுநர் வேலை கொடுக்கப்பட்டு பிறகு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறார். தார்ப்பாய் போன்ற உடை அணிவித்து மூச்சுவிட சிரமப்படும் பாலைவனத்தில் சோறு கொடுக்காமல் வெறும் பண் மட்டுமே தின்ன கொடுத்து, அந்த ஒட்டக முதலாளி மனோஜை கொத்தடிமையாக்கி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கதறும் மனோஜ்
இதனால் தனது உயிரே போய்விடும் என்ற அச்சத்தில் ஒட்டகம் மேய்த்துவரும் மனோஜ்! தனது பெற்றோருக்கு போன் செய்து தனக்கு நேர்ந்துள்ள கொடுமைகளை கூறி கதறி அழுது தன்னை காப்பாற்றும்படி கூறி வருகிறார். மகன் கதறுவதை கண்ட மனோஜின் பெற்றோர் அழுது புலம்பி கொண்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

கலெக்டரிடம் மனு
இது சம்பந்தமாக தங்கள் மகன் மனோஜை மீட்டு தரக்கோரி மனோஜியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மனு அளித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்து
குடும்ப வறுமையை போக்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு ஆசையில் ஏமாற்றப்பட்டு இன்று கொத்தடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைக்கப்படுகின்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்ட டிப்ளமோ இன்ஜினியர் மனோஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சவுதி அரேபியாவில் போராடி வருகின்ற பரிதாப நிலை உள்ளது. இதனால் இளைஞர் மனோஜை தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ள மனோஜை மீட்டு தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு லட்சியம் கிராமத்தினரிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications