ஆசை காட்டினால் வந்துவிடுவோமா விஜய்.. நான் சராசரி அரசியல்வாதி இல்லை - கொதித்தெழுந்த திருமாவளவன்
விழுப்புரம்: ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிடுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தை கட்சியினரை தவெகவினர் நினைக்கின்றனர். நான் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும் என்று விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். அதேபோல, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பாசிசம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பத்து நாட்களுக்கு மேலாகியும் தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவும் விஜய்யின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்று உளவுத்துறை மூலமாக தகவல் எடுத்தனர்.
விஜய்யை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம். இருப்பினும் இளைஞர்களை விட்டுவிடக் கூடாது என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிடுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தை கட்சியினரை நினைக்கின்றனர். நான் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும் என்று விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்தக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: விஜயகாந்த் வந்தபோது கூறினார்கள் விசிக காணாமல் போய்விடும் என்று. இன்று விஜய் வந்தவுடன் பயங்கரமான ஹைப் கொடுக்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் திரும்ப திரும்ப போட்டுக் காட்டுகின்றனர். ஆனால், நமக்கு அப்படி செய்யவில்லை. நான் சினிமா நட்சத்திரம் கூட இல்லை. எப்படி இவ்வளவு லட்சம் பேரை ஈர்த்தார்கள் என்று விவாதித்தார்களா.
7 மணிக்கு மேல் கூட்டம் தாங்காது என்று ஏளனமாகத்தான பேசினார்கள். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அப்படி இல்லை. விஜய்க்கு ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். விசிகவுக்கு என்ன இன்ஆர்கானிக் மாஸா.. நாங்கள் காசு, பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர்.
திருமாவளவன் தலைமையில் ஆட்சி, கூட்டணி என்று யாராவது பேசினார்களா. இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்திருக்கிறார்கள். விசிகவை ஆசை காட்டினால் வெளியில் வந்துவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். திருமாவளவன் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும்.
அதைப் புரிந்து கொள்ளவே உங்களுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் வந்தாலும், புதிய புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு போட்டியாளர்களாக இருக்க முடியாது. எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்முடன் போட்டிக்கு வர முடியாது.
இந்த இயக்கத்தை நம்மால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். எனவே, நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாது. அவ்வாறு தவறாகப் பேசிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications