திண்டிவனத்தில் ஆவின் பால் லாரி மீது அடுத்தடுத்து மோதல்..பற்றி எரிந்த வாகனங்கள்- ஒருவர் பலி!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவின் பால் ஏற்றிச் சென்ற லாரி மீது, இருசக்கர வாகனம், கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ஒருவர் பலியான நிலையில், வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் பால் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, திண்டிவனம் முன்பாக ஜாக்காம்பேட்டை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஆவின் டேங்கர் லாரி மீது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
உ.பி. யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 20 பேர் பலி
இருசக்கர வாகன ஓட்டி பலி
இவ்விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர், லாரியின் பின் பக்கம் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் போது பின்னால் வந்த காரும், கீழே இருந்த இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, நிலைத்தடுமாறி டேங்கர் லாரி மீதும் பயங்கரமாக மோதி நின்றது.
தீப்பிடித்த வாகனங்கள்
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பற்றியது. மேலும், லாரி, காரிலும் தீப்பற்றி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரும், டேங்கர் லாரி ஓட்டுனரும் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீயை அணைத்தனர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உருக்குலைந்த வாகனங்கள்
இந்த விபத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் லாரி ஆகிய அனைத்தும் தீக்கிரையாகி எலும்புகூடாக காட்சி அளித்தன. விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியும், காரும் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த கோர விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.