மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தில் மயக்கம்.. காலமானார் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 69.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நேற்று முன் தினம்தான் அவர் சென்னையிலிருந்து விக்கிரவாண்டி திரும்பினார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலே அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விழுப்புரத்தில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்க பாடுபட்டவர் புகழேந்தி. இவரது இறப்பு குறித்து தகவலறிந்த திமுகவினர் கண்ணீருடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications