முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிரான வழக்குகள்.. விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்குகள், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 7 தேதியும், வானுார் அடுத்த ஆரோவில் பஸ் நிலையத்திலும், 10ம் தேதி கோட்டக்குப்பம் நகராட்சி திடலிலும், மே 1ம் தேதி மற்றும் ஜூன் 21ம் தேதி விழுப்புரத்திலும் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டங்கள் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, அவர் மீது, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம், தனித்தனியாக 5 அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சண்முகம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான உத்தரவு வரும் வரை, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக்கோரி மனு அளித்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூர்ணிமா, 5 வழக்குகளின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
வழக்குகள் என்ன: 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதலமைச்சர் என விமர்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இதையடுத்த இந்த இரண்டு அவதூறு வழக்குகளையும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எதிர்கொள்ள வேண்டியது உறுதியாகி உள்ளது. இதனிடையே ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications