கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது..பல உயிர் போயும் யாரும் குரல் கொடுக்கலையே?எடப்பாடி பழனிச்சாமி
விழுப்புரம்: கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு தவறி விட்டதால் பல உயிர்களை இழந்திருக்கிறோம் என்றும் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இத்தனை உயிர்கள் பறிபோன பின்னரும் எந்த சமூக பேராளியோ, நடிகரோ கள்ளச்சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் சனிக்கிழமையன்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் கள்ளச்சாரய மரணத்திற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள். கள்ளச்சாராயம்தான் ஆறாக ஓடுகிறது.

கள்ளச்சாராயம் குடித்தவர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் பலரை கைது செய்கின்றனர். முன்போ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்க தேவையில்லை.
கள்ளச்சாராயத்தை பற்றி பாடிய சமூக ஆர்வலர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? நடிகர்கள் யாரும் இப்போது வாயை திறக்கவில்லையே என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications