"இடஒதுக்கீடு இல்லை, ஆனால்.." விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை இதுதான்! உற்று பார்த்த தொண்டர்கள்
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் விளக்கப்பட்டது குறிப்பாகச் சமதர்ம சமூக நீதி என்ற தலைப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்ன என்பது விளக்கப்பட்டது. பிறகு விஜய்யும் இது தொடர்பாக விளக்கி பேசினார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் கொடி மற்றும் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க நேற்று இரவு முதலே விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் குவிந்தனர். இன்று மாலை மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை ஏற்றினார்.
கொள்கை என்ன: தொடர்ந்து விஜய் கட்சியின் கொள்கைகள் பேராசிரியர் சம்பத் குமார் விளக்கினார். அதில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்துக் குறிப்பாக விளக்கப்பட்டன. விகிதாச்சார அடிப்படையில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதே தவெக கொள்கை என்று குறிப்பிடப்பட்டது...
நமது கொள்கை மதச்சார்பற்ற கொள்கைகள். அதாவது secular social justice என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிடப்பட்டது. சமதர்ம சமூக நீதி என்ற தலைப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்ன என்பது குறித்தும் அக்கட்சியின் நிர்வாகி பேராசிரியர் சம்பத் குமார் விளக்கினார்.
சமூக நீதி: சம்பத் குமார் மேலும் கூறுகையில், "இட ஒதுக்கீடு இல்லை.. விகிதாச்சார அடிப்படையிலான இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்ற தாழ்வுகளை அகற்றிச் சாதி முழுமையாக ஒழிக்கப்படும் காலம் வரை அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் சமதர்ம சமூக நீதி" என்றார்.
மேலும், நடிகர் விஜய்யும் தனது பேச்சில் இது தொடர்பாகப் பேசினார். அனைத்து பிரிவினரும் பலன் பெற வேண்டும் என்றால் விகிதாச்சார அடிப்படையிலான இடப் பங்கீடே தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், விகிதாச்சார அடிப்படையிலான இடப் பங்கீடு வழங்க வேண்டும் என்றால் அதற்குச் சாதி ரீதியாலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
விகிதாச்சார பிரதிநிதித்துவம்: நமது நாட்டில் இப்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தேசியளவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைச் சேர்த்து து 59% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரம் நமது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தகட்டமாக விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதியை வலியுறுத்துவோரின் கோரிக்கையாக உள்ளது. விஜய்யும் அதையே தான் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையில் ஒரு பிரிவினர் எந்தளவுக்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அந்த பிரிவினருக்கு அதற்கேற்ப பிரதிநிதித்துவம் தருவதே என்பதே விகிதாச்சார பிரதிநிதித்துவமாகும்.












Click it and Unblock the Notifications