விஜய் மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா? விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சொன்ன விஷயத்தை பார்த்தீங்களா?
விழுப்புரம்: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு தவெக கட்சியினர் மாவட்ட எஸ்.பியிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்திய விஜய், நிர்வாகிகளை நியமனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அண்மையில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். இந்நிலையில், கட்சியின் முதல் மாநாட்டை நடத்த வேகம் காட்டி வருகிறார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இந்த மாதம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். முதலில் இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்திருந்த தவெக கட்சியினர் அங்கு இடம் கிடைக்காததால் சேலம், ஈரோடு எனப் பல்வேறு ஊர்களில் இடம் பார்க்க முயன்றனர். அங்கும் இடம் கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர். வரும் 23 ஆம் தேதி மாநாட்டை நடத்த தவெகவினர் முடிவு செய்துள்ளனர்.
தவெக மாநாட்டை வரும் 23ஆம் தேதி நடத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவில் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், வாகனம் நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்ட இடத்தில், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தவெக தரப்பு அனுமதி கோரிய மனுவில் குறிப்பிட்ட இடம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு நடக்கும் பகுதி விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ளது. சாதாரணமாக வார இறுதி நாட்களிலேயே அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் மாநாடு அப்பகுதியை ஒட்டி நடந்தால் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது கட்சியின் மாநாட்டை இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே நடத்தியபோது பல மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதை போலீசார் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது. அதனால், விஜய் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் தரப்பு அனுமதி கொடுக்குமா என்பதில் இன்னும் உறுதியான தகவல் இல்லை.
இந்த நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட எஸ்.பி முடிவெடுத்து அறிவிப்பார். போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications