வெறும் 24 வயசுதான்.. எந்நேரமும் அபிதாவை டார்ச்சர் செய்த குடும்பம்.. கடைசியில் நடந்த ஷாக்..!
வரதட்சணை கொடுமைக்காக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
விழுப்புரம்: 24 வயதிலேயே இளம்பெண் அபிதா, தன் வாழ்க்கையை பரிதாபமாக முடித்து கொண்டார்.. இதற்கு காரணம் பாழாய் போன வரதட்சணை கொடுமைதான்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி.. 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் அபிதா.. 24 வயதாகிறது.
கல்யாணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது.. ஆனாலும் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது..

தற்கொலை
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிதா தன்னுடைய ஆனத்தூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணவர் தட்சணாமூர்த்தி வீட்டிற்கு மறுபடியும் வந்துள்ளார்.. ஆனால், நேற்று மாலை அபிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், அபிதா வீட்டிற்கு தகவல் தந்துள்ளனர்..

புகார்
கணவர் வீட்டிற்கு போய் ஒரே நாளில் மகள் தற்கொலை என்ற செய்தியை கேட்டதும், அபிதா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. அலறியடித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்று மகளின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதனர்.. பின்னர் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்களின் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணம், தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுதான் என்றும் அபிதாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

வரதட்சணை
திருமணம் ஆனதில் இருந்தே அபிதாவுக்கு வரதட்சணை கொடுமைதான் நடந்ததாம்.. கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா, கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் இவர்கள் எல்லாருமே வரதட்சணை கேட்டு அபிதாவை டார்ச்சர் செய்தனர் என்று அந்த புகாரில் அபிதாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

திருமணம்
இந்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.. அபிதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. கல்யாணமாகி ஒருவருடம்தான் ஆகிறது என்பதால், கோட்டாட்சியர் விசாரணைக்காக வைக்கப்பட நேர்ந்தது.. ஆனால், கோட்டாட்சியர் அமித் அங்கு வருவதற்கு காலதாமதம் ஆனதால், பெண்ணின் சடலம் நேற்றெல்லாம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படாமல், அந்த மார்ச்சுவரியிலேயே வைக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அபிதாவின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்... இந்த தகவலிறிந்ததும் செஞ்சி போலீசார் அபிதாவின் குடும்பத்தினரிடம் பேசி சமாதானம் செய்தனர்.. பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது... இதையடுத்து, திண்டிவனம் கோட்டாட்சியர் அமீத், செஞ்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அபிதாவின் உடலை மருத்துவக் குழுவினர்களுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

கைது
பின்னர் அபிதாவின் சடலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது... இறுதியில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.. தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.. இப்போது தட்சிணாமூர்த்தி ஜெயிலில் உள்ளார்.. கல்யாணம் ஆகி ஒருவருடம் கூட நிம்மதியாக அபிதா வாழாமல் இப்படி அநியாயமாக வாழ்க்கையை முடித்து கொண்டாரே என்று அந்த பகுதி மக்கள் கலங்கி கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications