சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 10 பேர் பலி.. முதல்வர் இரங்கல்.. ரூ.3 லட்சம் நிவாரணம்
விருதுநகர்: சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் நேரிட்ட பயங்கர வெடி விபத்தில் 4க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் மேலும் வெடித்து சிதறிக்கொண்டிருப்பதால் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் உள்ள இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மனித தவறுதான் விபத்திற்கு காரணம் என்று கூறினார். விதிகளை மீறி அளவிற்கு அதிகமாக வெடி மருந்து பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். சம்பவ இடத்திற்கு வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications