சாத்தூர் திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் தங்கம்.. இளம்பெண் அபியா சிக்கியது எப்படி?
விருதுநகர்: சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜின் குடும்பத்தினர் பிரசாரத்தில் மும்முரமாக இருந்ததை பயன்படுத்தி, அவரது வீட்டில் புகுந்து சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கைவரிசை காட்டி 122 பவுன் தங்க நகையை திருடியிருக்கிறார்கள். இதற்கு அவருடைய மனைவி பவானி, இளம்பெண் அபியா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கடற்கரைராஜ் என்பவர் போட்டியிட்டுள்ளார். இவர் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மாடியில் இளைய மகன் விக்னேஷ் மற்றும் மருமகள் வசித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டில் 122 பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.45 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரோக்கிய ஜான்போஸ்கோ (41) என்பவர் சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்தனர். அவரை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர்.
இதன் அடிப்படையில் சாத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (31), அவருடைய மனைவி பவானி (30) மற்றும் அபியா (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சாத்தூர் கோர்ட்டில் நீதிபதி வரதராஜன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவலில் எடுக்கப்பட்ட ஆரோக்கிய ஜான் போஸ்கோவும் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர், கைதான சுரேஷ்குமார் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள நிலையில், இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவர் ஆவார்.
சாத்தூர் தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜின் குடும்பத்தினர் பிரசாரத்தில் மும்முரமாக இருந்ததை பயன்படுத்தி, அவரது வீட்டில் புகுந்து சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கைவரிசை காட்டி இருப்பதாகவும், இதற்கு அவருடைய மனைவி பவானி, இளம்பெண் அபியா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துணிகர கொள்ளையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான் முழுவிவரமும் தெரியவரும் என்பதால் நகை யார் யாரிடமும் இருக்கிறது என்பதையும் விசாரித்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications