பெண்கள் மதிக்கப்படும்... இடத்தில்தான் செல்வம் இருக்கும்... சொல்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
விருதுநகர்: பாஜக வேட்பாளரை ஆதரித்து விருதுநகரில் பிரசாரம் செய்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பெண்கள் மதிக்கப்படும் தேசத்தில் தான் செல்வம் அதிகம் இருக்கும் என்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கழகத்தின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பேசினார்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அனைவருக்கும் அன்பு வணக்கம் என்று தமிழில் பேச தொடங்கினார்.
தமிழ் மொழியும் கலசாரமும்
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் கலாசாரத்தின் மீது பிரதமர் மோடி மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்றும் கடந்த ஆறு வருட ஆண்டு ஆட்சியில் எங்குச் சென்றாலும் தமிழர்களின் பெருமையும், கலாசாரத்தையும் பற்றியே பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்மொழி நாட்டிலுள்ள அத்தனை இடங்களிலும் கலந்துள்ளது என்றும் தமிழ்மொழி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் பேசினார்.
அடிப்படை வசதிகள்
கடந்த 60 ஆண்டுக் கால ஆட்சியில் காங்கிரஸ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றும் ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் சாதாரண குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால்கூட 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் அவர் பேசினார். மேலும், நாட்டில் அடிப்படை வசதிகளான ரயில்வே துறை, விமானத் துறை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்டு வந்தது பாஜக ஆட்சிதான் என்று அவர் தெரிவித்தார்.
மோடி ஆட்சி
உலகத்தில் மிகப்பெரிய பொருளாதார பட்டியலில் இந்தியா உயர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மோடி வளர்ச்சிப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வதாகவும் தமிழகத்தின் வளர்ச்சியைத் தலைசிறந்ததாக மோடி மாற்றி வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
பெண்களை மதிக்கும் கட்சி
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், பெண்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களைத் தொடர்ந்து நடந்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத். பெண்கள் மதிக்கப்படும் தேசத்தில் தான் செல்வம் அதிகம் இருக்கும் என்றும் அவர் கூறினார். பாஜக ஆட்சியில் விருதுநகரில் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகமும், விளையாட்டு மைதானமும், இளைஞர்களுக்குப் பயிற்சி மையங்களும் அமைக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.