வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த ‘தங்க அணிகலன்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட புகைப்படம்!
விருதுநகர் : வெம்பக்கோட்டை அகழாய்வில் பண்டைக்கால அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் கண்டறியப்பட்டது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை பல்வேறு அரிய கலைநயம் மிக்க பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் இப்பகுதியில் கண்டறியப் பட்டு வருவதன் மூலம் பண்டைக்காலத்தில் வாழ்ந்த இப்பகுதியினரின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் வியந்து பேசி வருகின்றனர்.

வெம்பக்கோட்டை அகழாய்வு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரிய பொருட்கள்
இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியில் அவ்வப்போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் இதற்கு முன்னால் சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்படும் பதக்கம், புகைக்கும் குழாய், திமிலுடன் கூடிய காளை உருவங்கள், பெண் சிற்பங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டன.

தங்க அணிகலன்
இதனைத் தொடர்ந்து இன்று பண்டைக்கால மக்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க நகைகள் அணிந்ததற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்யும் வகையில் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘தங்க அணிகலன்' புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்
மேலும், வெம்பக்கோட்டையில் நடக்கும் அகழாய்வு பணியின்போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்தப் பொருட்கள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருட்களாக இருக்கக்கூடும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications