"திருப்பியடி".. துள்ளு மாரியம்மன் கோயிலுக்குள் வேலூர் இப்ராஹிம்.. வீரம் திமுகவுக்கு மட்டும்தானா: நச்
விருதுநகரில் நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் வேலூர் இப்ராஹிம்
விருதுநகர்: தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநரை திமுக இழிவுபடுத்தினால், அது தமிழக மக்களை இழிவுபடுத்துவதற்கு சமம் என்று விருதுநகரில் விழாவில் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் திமுகவினரை பாஜகவினர் திருப்பி அடிப்பார்கள் என்றும் காட்டமாக கூறியுள்ளார் இப்ராஹிம்.
விருதுநகரில் பாஜகவின் கிழக்கு மாவட்டம் சார்பாக "நம்ம ஊரு மோடி" பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.
இவ்விழாவில் பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. அதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் உள்ள துள்ளு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனமும் செய்தார். அவருடன் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
விழா
பாரத் மாதா கி ஜே
அப்போது மேடையில் பேசிய வேலூர் இப்ராஹிம் திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. "விருதுநகரில் திமுக ஒன்றிய செயலாளரை தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பாஜகவினர் அடி வாங்கிட்டே போக மாட்டோம். காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜகவினரும் திருப்பி அடிப்பார்கள்.. திமுகவினருக்கு மட்டுமே வீரம் இருக்கா என்ன? பாரத் மாதா கி ஜே என சொல்லும் பாஜகவினருக்கும் அதை விட வீரம் இருக்கு என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று காட்டமாக கூறினார்.
முதல்முதலாக
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், அப்போதும் திமுகவை கடுமையாக விமர்சித்தும், குற்றம்சாட்டியும் பேசினார்.. "ஆளுநரை இரண்டாவது கட்டமாக திமுக இழிவுபடுத்தி இருக்கிறது.. தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆளுநரை இழிவுபடுத்தி பேசுவதை, முதல்வர் அமைதியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.. திமுக ஆட்சியில் மரபுகளை மதிப்பதில்லை.. இதுவரை சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட மரபு மீறல்கள் நடந்ததே கிடையாது.. இப்போதுதான் முதல் முறையாக நடைபெறுகிறது..
சூளூரை
திமுகவினர் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் சட்டமன்ற மரபுகளுக்கு எதிராகவும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் மேதகு ஆளுநர் ரவி அவர்களை இழிவுபடுத்தும் செயல்களை செய்தால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்.. தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அமர்ந்திருக்கும்போது, அவரை இழிவுபடுத்தினால் எப்படி, ஆளுநர் அங்கே அமர்ந்திருப்பார்? தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநரை இழிவு படுத்தினால், அது தமிழக மக்களை இழிவு படுத்துவதற்கு சமம்.. ஆளுநரின் எதிர்ப்பு என்பது தமிழக மக்களின் எதிர்ப்பாக ஆளுநர் பதிவு செய்திருக்கிறார்.. இதை திமுக மடைமாற்றுகிறது..
திருப்பி அடி
திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை. திமுகவினர் ஒரு பக்கம் தமிழகம் தலை நிமிர்கிறது என்று போஸ்டர்களை அடித்து ஒட்டியிருக்கிறார்களே, அதில் "தமிழகம்" என்று திமுகவினர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதையே "தமிழகம்" என ஆளுநர் சொன்னால் மட்டும் தப்பு என்று சொல்கிறீர்களே ஏன்? திமுகவினர் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் உங்களை திருப்பி அடிப்பார்கள்" என்றார் வேலூர் இப்ராஹிம்.
தொப்பி முஸ்லிம்
முன்னதாக, ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து இப்ராஹிம் பேசியிருந்தார். அப்போதும் திமுகவை கடுமையாக தாக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.. "இஸ்லாமியர்கள் படிக்காமல் வன்முறை சக்திகளாகவே திகழ வேண்டும் என்பதுதான் திமுகவுடன் எண்ணமா? இஸ்லாமியர்களை பொறுத்தவரை கல்வியறிவு பெற்றுவிட்டால் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். இஸ்லாமியர்களை திரும்பத் திரும்ப மதவாதிகளாகவே சித்தரிக்க கூடிய வேலையை திமுக செய்கிறது. அதனால்தான் தன்னை தொப்பி போடாத முஸ்லிம் என்று சொல்லி கொள்கிறார்.. இந்த மக்களின் வளர்ச்சிக்காக எந்த ஒரு முன்னெடுப்பையும் இந்த அரசு நெடுங்காலமாக செய்யவில்லை.. ஆனால், பாஜக, அனைத்து மதங்களையும் மதிக்கக்கூடிய கட்சி அனைத்து மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய கட்சி" என்று கூறியிருந்தது குறிப்படத்தக்கது.