மோடிக்கு ஒரே மாற்று ராகுல்தான்.. சீறிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு.. விருதுநகரில் நடந்த பரபர ஆலோசனை
விருதுநகர்: திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு இந்தியாவின் அனைத்து மாநிலக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் உண்டு என கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மேற்குறிப்பிட்டவாறு அவர் பேசியுள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீதும் விமர்சனம் வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் எனவும் தனது உரையில் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில், கட்சியின் நிலைமை சற்று தள்ளாடி வருகிறது. இதற்கிடையில் கட்சியை பலப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய கட்சியின் எம்பி திருநாவுக்கரசு, மாநில கட்சிகள் குறித்து விமர்சித்து பேசினார்.
அதாவது இந்தியாவின் அனைத்து மாநில கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாத கட்சிகள் இல்லை. எல்லாக் கட்சிகளுக்கும் வாரிசுகள்தான் தலைவர்களாக உள்ளனர். ஆனால் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையென்று சொல்லலாம். இல்லைதான். ஏனெனில் அக்கட்சியின் தலைவர்களாக இருந்த வாஜ்பாய் திருமணம் செய்துகொள்ளவில்லை. மோடிக்கும் அதே நிலைதான்"என்று கூறியுள்ளார்.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசு, "மோடிக்கு சரியான மாற்று என்றால் அது ராகுல் காந்திதான். மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் ராகுல் காந்திதான். மோடி யாரை பார்த்து பயப்படுகிறார் என்றால் அது ராகுல் காந்தியை பார்த்து மட்டும்தான். அதனால்தான் அவர் மீது தொடர் அரசியல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காய்த்த மரத்தில்தான் கல்லடி விழும்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய குலாம் நபி ஆசாத், "கட்சி சீரழிவுக்கு ராகுல் காந்திதான் முழுக்க முழுக்க காரணம்" என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்த் சர்மாவும் ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என திருநாவுக்கரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications