புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்.. பௌர்ணமி.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க குவியும் பக்தர்கள்
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 30ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இன்றைய தினம் வளர்பிறை பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் நான்கு நாட்களும் சதுரகிரிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை நித்ய பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை மறுநாள் 29ஆம் தேதி புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வளர்பிறை பிரதோஷ நாளான இன்று முதல் 30ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை முதலே சதுரகிரி மலையேறுவதற்கு பக்தர்கள் தாணிப்பறையில் குவிந்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வளர்பிறை பிரதோஷம், நாளைய தினம் சிவராத்திரி, நாளை மறுநாள் பவுர்ணமி வருவதால் சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். தொடர் விடுமுறை காலம் என்பதால் சதுரகிரிக்கு நான்கு நாட்களிலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications