அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதவி தப்புமா? சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!
விருதுநகர் : வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிராக அமைந்தால், அவரது அமைச்சர் பதவி பறிபோகும் என்பதால், இன்றைய தீர்ப்பு பற்றி மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக பல அமைச்சர்கள் மீது அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் மீதான வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

அமைச்சர் வீட்டில் சோதனை
கடந்த 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.94.88 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆஜராகினார். மேலும், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இன்று மீண்டும் விசாரணை
அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

பதவி தப்புமா?
இந்நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. தீர்ப்பு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிராக வரும் பட்சத்தில் அவரது அமைச்சர் பதவி பறிபோகும். எனவே, இன்றைய வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம் தென்னரசு
இதேபோன்று தற்போதைய தொழில்துறை அமைச்சரும் 2006-2011 காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்த தங்கம் தென்னரசு மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications