அண்ணாமலையை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த்! கோபத்தின் பின்னணி என்ன?
விருதுநகர்: 2 ஆடு, 2 கோழி வைத்திருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதுக்கு Y பிரிவு பாதுகாப்பு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 ஆடுகளும், 2 கோழிகளும் மட்டுமே தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது என அவர் வினவினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் தேமுதிக இருந்ததும், இப்போதும் வெளியேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சொத்து வரி
தமிழக அரசின் சொத்து வரியை கண்டித்து விருதுநகரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக சாடினார். சொத்து வரியை திமுக அரசு குறைக்கவில்லை என்றால் மிகப்பெரும் அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் சொத்து வரி உயர்வை தமிழக மக்களால் தாங்க முடியவில்லை எனவும் பேசினார்.

கச்சத்தீவை மீட்கவும்
தமேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலைவாசிகளும் உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்த அவர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். விவசாயமில்லாமல், தொழில் இல்லாமல் மக்கள் ஏற்கனவே பல்வேறு சுமைகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் விலைவாசி உயர்வை அவர்களால் எப்படி தாங்க முடியும் என வினவினார்.

அண்ணாமலைக்கு பாதுகாப்பு
அதேபோல் 2 ஆடு, 2 கோழி வைத்திருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதுக்கு Y பிரிவு பாதுகாப்பு என கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், உத்தமராக இருந்தால் Y பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என அண்ணாமலை எழுதிக்கொடுக்க வேண்டும் என பேச்சில் அனல் கக்கினார் பிரேமலதா. திமுக மீதும், பாஜக மீதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா காட்டிய கோபம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தேமுதிக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளியேறியது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் தேமுதிக அங்கம்வகித்தும் தங்கள் கட்சிக்குரிய அங்கீகாரத்தை பாஜக மேலிடம் வழங்கவில்லை என்பதே பிரேமலதாவின் கோபத்துக்கு காரணமாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ராஜ்யசபா சீட்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்ட நிலையில், பாஜக கோட்டாவில் ஜி.கே.வாசன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலே பாஜக மீது கோபத்தில் இருந்து வரும் பிரேமலதா, விருதுநகர் ஆர்ப்பாட்ட மேடையில் வெளுத்து வாங்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications