சதுரகிரியில் கொட்டிய கனமழை..மலையேற வனத்துறை அனுமதி மறுப்பு - ஏமாற்றத்தில் பக்தர்கள்
விருதுநகர்: கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு.
லேசாக உயர்ந்த கேஸ்கள்.. குரங்கு அம்மை தொற்றை தடுக்க தீவிரம்! சிறப்பு குழு அமைக்க மத்திய அரசு முடிவு!
நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை 'சித்தர்கள் வாழும் பூமி' என்று அழைக்கின்றனர்.
இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை விழா இங்கு ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நேற்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடந்த 25ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆடி தேய்பிறை பிரதோசம், சிவாராத்திரி நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி மலை
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் சதுரகிரியில் புதன்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மலை ஏறி கோவிலுக்கு சென்ற 2 ஆயிரம் பக்தர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையால் வெள்ளம்
பெரும்பாலான பக்தர்கள் கீழே இறங்கி வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சதுரகிரி மலை அடிவாரம் பகுதி முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதேபோல மலை மேல் சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கி வந்த பக்தர்கள் நடுவழியில் பலத்த மழையில் நனைந்தபடி ஒதுங்குவதற்கு கூட இடம் இன்றி தவித்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் மழையில் நனைந்தபடியே அடிவாரத்தை நோக்கி ஓடிவந்தனர்.
காவல்துறை பாதுகாப்பு
ஆங்காங்கே ஓடை பகுதியில் ஏற்கனவே வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி வந்த பக்தர்களை பாதுகாப்புடன் அடிவாரத்திற்கு அனுப்பி வைத்தனர். நீர்வரத்து அதிகாி்த்ததால் ஓடை பகுதியில் கயிறுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. பக்தர்களை நீரோடை பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரத்துக்கு போலீசார், தீயணைப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.
கோவிலில் தங்கிய பக்தர்கள்
மழை காரணமாக மலை உச்சியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக கோவில் வளாக மண்டப பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். மலையில் தங்க வைக்கப்பட்டு உள்ள பக்தர்கள் இறங்குவதற்கு உண்டான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை தடை
ஆடி அமாவாசையால் 30ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். இதனால் இன்றும் ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு வந்தனர். கனமழை நீடிப்பதால் இன்றைய தினம் பக்தர்கள் சதுரகிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.