என்னைப் பார்க்க வாங்க.. வேதனையுடன் குடும்பத்தினரை அழைக்கும் நிர்மலா தேவி
ஸ்ரீவில்லிபுத்தூர்: நடைபெற்று வரும் வழக்கு சம்பந்தமாக தனது கருத்தை கணவர், அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க நிர்மலா தேவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பிறகு வழக்கை நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
நிர்மலாதேவியை தவிர பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா தேவி கூறியதாவது:
யாருமே வரலை
என் அண்ணன், அண்ணி, கணவர் யாரும் என்னை பார்க்கவே வருவது இல்ல. அண்ணன், அண்ணி, எனது கணவர் எல்லாரையும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க. என் கணவர் என்மேல இருக்குற கோபத்துலதான் பேசாம இருப்பார்.
அவரிடம் பேச வேண்டும்
அவரை சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க. வரசொல்லுங்க நான் அவர்ட்ட பேசணும். அந்த ஆடியோ கேட்டதுல இருந்தக் கோபத்துல விவாகரத்து முடிவுக்கு அவர் வந்திருப்பார். அவருக்கு மெசெஜ் அனுப்பி என்ன சிறையில் வந்து பார்க்க சொல்லுங்க.
நடப்பது தெரியவில்லை
இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல, என்னென்னமோ நடக்குது. என் வக்கீல் வழக்கை விட்டு விலகிட்டாரு அப்படிங்குறதே நீங்க சொல்லிதான் தெரியும். எனக்கு இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல. கேஸ் பத்தி எதும் கேக்காதீங்க, அதை விடுங்க. வீட்டில இருக்குற எல்லோரையும் என்ன வந்து பார்க்க சொல்லுங்க.
முதுகெலும்பு வலிக்குது
சிறையில் சித்திரவதையெல்லாம் இல்லை. பழைய உடைகள் மட்டும்தான் இருக்கு, புது உடை கொடுக்கக்கூட ஆட்கள் யாரும் வரவில்லை. அதே உடைகளைதான் நான் திரும்பத் திரும்ப போட்டுக்குறேன். ஸ்பைனல் கார்டில் பிரச்சனை இருக்கு. அதிகமாக வலி எடுக்குது என்று விரக்தியுடன் கூறினார் நிர்மலா தேவி.