காற்று லேசாக திரும்புதே.. ராதிகாவிற்கு கிடைத்த "வெளிச்சம்".. விருதுநகரில் களநிலவரம் எப்படி இருக்கு?
விருதுநகர்: விருதுநகர் தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக மாறி உள்ளது. இங்கே பாஜக சார்பாக ராதிகா சரத்குமார் - அதிமுக கூட்டணியில் தேமுதிக விஜய பிரபாகரன் - காங்கிரஸ் மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் இங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர்.
பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நிலையில் ஒரே வாரத்தில் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார்.
கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்
அங்கே ராதிகாவை வேட்பாளராக நியமித்ததை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. நேற்று விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
உண்மையான கள நிலவரம்: ஒரு பக்கம் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் பலரும் ராதிகா சரத்குமாருக்கு பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் களநிலவரம் என்னவோ ராதிகாவிற்கு கொஞ்சம் சாதகமாகவும் உள்ளது என்கிறார்கள்.
முக்கியமாக அங்கே உள்ள நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் கொண்டு உள்ளனராம். திமுக இந்த முறை நாடார் வேட்பாளர்களை இறக்கவில்லை என்ற அதிருப்தி அந்த ஜாதியினரை இடையே உள்ளது. இது போக நாடார் தலைவர்களை இதுவரை மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்க்கவில்லையாம். ஆனால் ராதிகா சரத் குமார் முதல் நாளே நாடார் தலைவர்களை நேரிடியாக போய் பார்த்து ஆதரவு கேட்டுள்ளார்.
அதோடுதான் நிலைமை கொஞ்சம் அவருக்கு சாதகமாக இருக்கிறதாம். இன்னொரு பக்கம் அங்கே புதிய பஸ் ஸ்டான்ட் கட்டியும் கூட அதை திறப்பதற்கான வேலைகளை இன்னும் பார்க்கவில்லை. இதையும் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாக்கூரை மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனராம்.
பாஜக மீது அனுதாபம் இல்லாதவர்கள் கூட விஜயகாந்த் முகத்திற்காக விஜயபிரபாகன் மீது அனுதாபம் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாணிக்கம் தாக்கூர் பெரிதாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற புகார்தான் மக்கள் இடையே உள்ளதாம். இப்போது ராதிகா - விஜய்பிரகாரன் இடையே கடும் போட்டி உள்ளது.
இவர்களுக்கு இடையில் பிரியும் வாக்குகள் வேண்டும் என்றால் மாணிக்கம் தாகூர் பக்கம் செல்லலாம் என்கிறார்கள். விரைவில் மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் வேலை செய்ய தொடங்கியதும் களநிலவரம் மாறும் என்கிறார்கள். மாணிக்கம் தாகூர் பலமே பூத் கமிட்டி மற்றும் உள்ளூர் நிர்வாகிகள். அவர்களை வேலைகளை தொடங்கியதும் களநிலவரம் காங்கிரசுக்கு சாதகமாகவும் மாறும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications