விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு.. பிரேமலதா கொதிப்பு.. மாணிக்கம் தாகூர் பதிலடி
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறியுள்ள பிரேமலதாவின் குற்றச்சாட்டிற்கு அந்த தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விருதுநகர் தொகுதி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடுமையான போட்டியை அளித்தார். இறுதியாக 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்ற நிலையில், தேமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தார். இதனால் அதிமுக மற்றும் தேமுதிக கட்சியினர் சோகமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் விருதுநகர் வெற்றியின் மூலமாக திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அடைந்த தோல்வி குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், விஜய பிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். திட்டமிட்ட சூழ்ச்சியால் விஜய பிரபாகரனை வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவேளைக்கு பின் இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தனக்கு அழுத்தம் வருவதால் செல்போனை அணைத்து வைப்பதாக விருதுநகர் ஆட்சியர் கூறியுள்ளார். இதனால் விருதுநகரில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இ-மெயில் மூலமாக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளோம். 13 சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
பிரேமலதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தது என்று பிரேமலதா குற்றச்சாட்டை முன்வைப்பது தவறான போக்காகும். வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரையில் விஜய பிரபாகரன் மற்றும் ராஜேந்திர பாலாஜி இருவரும் வாக்கு எண்ணும் மையத்தில் தான் இருந்தனர்.
இதனால் பிரேமலதாவின் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. நேர்மையான அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை வைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது என்றால், அங்கேயே கேட்டிருக்கலாம்.
தோல்விக்கு பின் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அமைதியாக புறப்பட்டு சென்றுவிட்டு, இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? பிரேமலதாவின் சாதி அரசியல் தோல்வியடைந்திருக்கிறது. தோற்றப்பின்னர் புலம்பக் கூடாது. இரவு 7 மணிக்கு பின் தோல்வியை ஒப்புக்கொண்டு தேமுதிகவினர் சென்றுவிட்டு, இப்போது ஏன் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications