'விதி விளையாட்டு' திமுகவிலிருந்து நான் வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டேன்! ஆனால் இப்போது.. - வைகோ!
விருதுநகர் : திமுகவிற்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன் ஆனால் விதியின் விளையாட்டு காரணமாக நான் திமுகவிலிருந்து வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன் எனவும், ஆனால் மீண்டும் இணைந்து செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளரான வைகோ கூறியுள்ளார்.
1993ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர்.
அந்த காலகட்டத்தில் திமுக என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய் தளபதியாய் கருணாநிதியின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற வைகோ'.

திமுக
எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி கட்சியை கைப்பற்றிய நிலையில், திமுக தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் திமுகவை விட்டு வைகோ வெளியேறியதற்கான காரணம் என வைகோவே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். பின்னர் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்த வைகோ, அரசியல் சூழல்கள் மாறி வரும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்.

மதிமுக வைகோ
இந்நிலையில் திமுகவில் இருந்து தான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன் எனவும், ஆனால் மீண்டும் இணைந்து செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளரான வைகோ கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினமும் நாளிதழ் , தொலைக்காட்சிகளில் நல்ல செய்தியை பார்க்க முடியவில்லை.

மோசமான நிலை
கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்திதான் வருகிறது. பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்துள்ளது. தமிழகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார் என்றார்.

வெளியேற்றப்பட்டேன்
திமுகவிற்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். விதியின் விளையாட்டு காரணமாக நான் திமுகவில் இருந்து வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன. ஆனாலும் தற்பொழுது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என பேசினார். என்ன காரணத்திற்காக வைகோ அப்படி பேசினார் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications