திடீரென மஞ்சள் நிற டிரஸ்ஸுக்கு மாறிய ராஜேந்திர பாலாஜி.. கலர் மாற என்ன பின்னணி?
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த சில நாட்களாக மஞ்சள் நிற சட்டை, வேட்டி அணிந்தவாறே அனைத்து பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறார்.
தனுசு ராசிக்காரரான அவர் குருவின் கோபபார்வையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வருகிறாராம்.
இவர் மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.ராஜவர்மன் ஆகியோரும் மஞ்சள் சட்டையுடனே காட்சியளிக்கின்றனர்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை ஆன்மிக ஈடுபாடு அதிகம் உடையவர். விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் தென் தமிழகத்தின் பல கோயில்களுக்கும் நிதியை வாரி வழங்கக்கூடியவர். நெற்றியில் பொட்டு கையில் பூஜை செய்யப்பட்ட கைறுகள் இல்லாமல் அவரை காண முடியாது. கலர் கலராக அவர் அணிந்துள்ள கயிறுகள் அரை டஜனை தாண்டும்.

அமைச்சர் கருத்து
தொலைக்காட்சி நேரலையிலும் சரி தன்னை சந்திக்க செல்கிறவர்களிடமும் சரி மனதில் தோன்றியதை மறைக்காமல் கொட்டக்கூடியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதனாலேயே அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். சில தருணங்களில் முதல்வரே நேரடியாக அழைத்து ராஜேந்திரபாலாஜியை அவரது பேச்சை சுட்டிக்காட்டி எச்சரித்த நிகழ்வுகளும் உள்ளன.

மன வேதனை
தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் போராடி பெற்ற அவருக்கு இப்போது அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவர் கூறிய கருத்து மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது. இது தொடர்பாக தலைமையில் இருந்து அவரிடம் பேசப்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் சோதனைகள் தன்னைச் சுற்றி சுழல்வது பற்றி தனக்கு நெருக்கமான ஜோதிடர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

குருவின் கோபம்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனுசு ராசி என்பதால் ஜென்ம குருவின் கோபபார்வை காரணமாக இப்படி சிக்கல் வருகிறது எனக் கூறிய ஜோதிடர்கள், சில நாட்களுக்கு அவரை மஞ்சள் சட்டைக்கு மாறக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவரோ ஒரு படி மேலே சென்று வேட்டியையும் மஞ்சள் நிறத்திலேயே அணியத்தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications