கொட்டிய மழை! குடைபிடித்து அமர்ந்து பேச்சை கேட்ட பொதுமக்கள்! இ.பி.எஸ்ஸை வறுத்தெடுத்த அமைச்சர் தங்கம்!
விருதுநகர்: மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சி இந்தியாவிலேயே இல்லை என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே அமைச்சர் தங்கம் தென்னரசு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது சாரல் மழை கொட்டிய போதும் குடை பிடித்தபடி அமர்ந்து அவர் பேச்சை திமுகவினரும் அப்பகுதி மக்களும் கேட்டனர்.

திமுக பொதுக்கூட்டம்
தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒரு பிடிபிடித்தார்.

முதுகெலும்பற்ற அதிமுக
இந்தி மொழி பற்றி அமித்ஷா கூறியதற்கு பதில் கருத்துக் கூறுவதற்கு அஞ்சி, அப்படியா எனக்கு அது பற்றிய விவரம் தெரியவில்லை எனக் கூறி பதுங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தொலைக்காட்சியில் தான் பார்த்து தெரிந்துகொண்டேன் எனக் கூறியவர் அவர் எனவும் தெரிவித்தார். பாஜகவுக்கு அஞ்சி முதுகெலும்பு இல்லாத அதிமுகவாக இன்று உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடினார்.

துணிச்சல் இல்லை
இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சி கிடையாது எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி வாய்திறக்க துணிச்சல் இல்லாத அதிமுக, சொத்து வரியை கண்டித்து எந்த முகத்தை வைத்து மக்களை சந்தித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது என வினவினார்.

கசப்பு மருந்து
சொத்துவரி உயர்வை பொறுத்தவரை அதை கசப்பு மருந்தாகவே முதல்வர் பார்க்கிறார் என்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி திரட்ட வேண்டுமானால் மத்திய நிதி குழு அறிவுறுத்தல் படி இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே அமைச்சர் தங்கம் தென்னரசு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது சாரல் மழை கொட்டிய போதும் குடை பிடித்தபடி அமர்ந்து அவர் பேச்சை திமுகவினரும் அப்பகுதி மக்களும் கேட்டனர்.












Click it and Unblock the Notifications