மோடியை பிரதமராக வர விடமாட்டோம்னு எடப்பாடி சொல்வாரா? கூட்டணி முறிவெல்லாம் நாடகம்.. காங். எம்பி
விருதுநகர்: மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மாணிக்கம் தாகூர் எம்பி நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் 9 வாரங்களாக 100 நாள வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய சம்பளத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கவில்லை.

ஆனால் டெல்லியில் இருந்து வந்து தமிழகத்தை தூய்மை செய்வத போல் நாடகமாடி வருகிறார். அவரது வேலையை சரியாக செய்து ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே பாஜகவினர், கன்னட அமைப்பினர் மூலம் மொழி பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள்.
அதை பார்த்துவிட்டு சீமான் போன்றவர்கள் எல்லாம் பொய்யான அரசியல் செய்து வருகிறார்கள். பாஜக- அதிமுக கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. மோடியை பிரதமராக வரவிடமாட்டோம் என சொல்ல எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இன்னும் பின் வழியாக சென்று மோடியிடம் பூங்கொத்து கொடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.
அதனால்தான் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என நாங்கள் சொல்கிறோம். வெளி வேஷத்திற்காகவும் அண்ணாமலைக்காகவும் கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடி வருகிறார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே கடந்த வாரம் கூட்டணி முறிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை என எடப்பாடி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட சிலர் அதிமுக- பாஜக இடையே கூட்டணியை புதுப்பிக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பாஜகவுடன் இனி பேச்சில்லை என்கிறார்கள்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த அண்ணாமலையை டெல்லி மேலிடம் வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்தால்தான் பாஜகவுக்கு வளர்ச்சி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்றே சொல்கிறார்கள்.
தேவைப்பட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் எடப்பாடியோ இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார். ரெய்டுகளுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக இல்லை என மூத்த நிர்வாகிகளும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications