சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! 2 அறைகள் தரைமட்டம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கு கூலித் தொழிலாளிகளாக தங்கள் உயிரை பணயம் வைத்து சொற்ப பணத்திற்காக பட்டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும் 7 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, ஆலையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பதைபதைப்பு அடங்குவதற்குள் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் தரைமட்டமாகின. மீதமிருந்த வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்த போது வேதியியல் மாற்றத்தால் வெடிவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகின.












Click it and Unblock the Notifications