விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்.. அச்சத்துக்கு காரணம் இதுதான்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதை அடுத்து, 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆய்வு நடத்தும்போது விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், ஆலைகளின் உரிமம் உடனடியாக ரத்தாகும் என்பதால், உரிமையாளர்களே ஆலைகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகள் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதாக வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படாததே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஜூலை 6 ஆம் தேதி கீழத்தாயில் பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறாக நடத்தப்படும் சோதனையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறியிருந்தால் உடனடியாக ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும். இதனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே விருதுநகரில் உள்ள சுமார் 200க்கும் அதிகமான பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உரிமம் ரத்தாகிவிடுமோ என பயந்து ஆலைகளை மூடி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவையடுத்து 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்கவிருந்தன. இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications