அமாவாசையின் போது காட்டுத்தீயால் பக்தர்கள் தவித்தார்களே! சதுரகிரி மலையில் தீவைத்தவர் கைது
விருதுநகர்: சதுரகிரி மலை பகுதிக்கு தீவைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களின் போது மலை மீது ஏறி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தந்தனர். சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் அதிக மழை என்றால் அனுமதி மறுக்கப்படும்.
கடந்த 17ஆம் தேதி சோமவார அமாவாசை என்பதால் 15 ஆயிரம் பக்தர்கள் ஈஸ்வரனை தரிசனம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட தவசிப்பாறை 5ஆவது பீட்டில் சதுரகிரி செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
கடந்த இரு மாதங்களாக இந்த பகுதியில் மழை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர் வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் காட்டுத் தீ வேகமாக பரவியது. இதையடுத்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தடை விதிக்கப்பட்டு கோயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தீயை அணைக்க சாப்டூர் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீயை அணைத்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணம் ரூ 10 வசூலிக்கப்படுகிறது. எனினும் இந்த வனத்துறையை பராமரிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த தீவிபத்துக் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மலை பகுதியில் தீ வைத்ததாக தாணிப்பாறையை சேர்ந்த யானை கருப்பன் கைது செய்யப்பட்டார். இவரை சாப்டூர் போலீஸார் கைது செய்தனர். எதற்காக மலை பகுதியில் தீவைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications