அந்த 3 பேரும்தான் சண்டை மூட்டி விட்டதே.. அதான் அம்மாவும் கேப்டனும் பிரிஞ்சுட்டாங்க.. பிரேமலதா தகவல்
Recommended Video

விருதுநகர்: "எல்லாத்துக்கும் காரணம் அந்த 3 பேர்தான்.. அவங்களாலதான் அம்மாவுக்கும், கேப்டனுக்கும் சண்டை வந்துடுச்சு" என்று பிரேமலதா காரணம் சொல்லி உள்ளார்.
விருதுநகரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது சொன்னதாவது:
விஜயகாந்த்தின் ரோல்மாடல் எம்ஜிஆர்தான். எங்க வீட்டு பெட்ரூமில் கூட எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் படம்தான் மாட்டி இருக்கு. எங்களுக்கு கல்யாணம் ஆனவுடன் வீட்டிற்கு ஜானகி அம்மாள் வந்தாங்க.. எம்ஜிஆர் பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தாங்க.

கார், பேன்ட்
அதே போல, யார் யாரோ வந்து எம்ஜிஆர்கிட்ட வேண்டியதை வாங்கிட்டு போறாங்க.. நீ வந்தால் என்ன என்று விஜயகாந்தை கேட்ட ஜானகி அம்மாள், எம்ஜிஆர் பயன்படுத்திய வேனையும், 'உலகம் சுற்றும் வாலிபனில்' பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் தந்துவிட்டு சென்றார். இது எல்லாவற்றையும் நாங்கள் பொக்கிஷமாக இப்போதுவரை பாதுகாத்து வருகிறோம்.

காப்பாற்றி இருக்கலாம்
ஜெயலலிதா, விஜயகாந்த் ரெண்டு பேருக்குமே அரசியலில் நடிக்க தெரியாது. ஜெயலலிதாவுக்கு மட்டும் வெளிநாட்டில் சிகிச்சை தந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் கூட அடிக்கடி பேசி கொள்வோம். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது கூட தொண்டர்களோடு தொண்டராக உட்கார்ந்து சாப்பிடக்கூடியவர் நம் விஜயகாந்த்.

ஏன் பிரிந்தீர்கள்?
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது 2011-ல் ஏற்பட்ட அதிமுக-தேமுதிக கூட்டணி சாதனை பற்றி சொன்னார். அப்போது எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்பறம் ஏன் பிரிந்தீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

அந்த 3 பேர்தான்
அதுக்கு காரணம் இருக்கு. நம் கட்சியில் இருந்த 3 துரோகிகள்தான் தூண்டிவிட்டு விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் கோபம் வரச்செய்தார்கள்.. அதுதான் மோதலாக மாறியது. அதற்கு பிறகுதான் பிரியும் நிலையும் ஏற்பட்டுவிட்டது" என்றார்.
அது சரி.. பிரேமலதா சொன்ன அந்த 3 பேர் யாராக இருக்கும்? ஓ.. ஆமாம்.. அவர்களாகத்தான் இருக்கும்!












Click it and Unblock the Notifications