வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை
ராஜபாளையம்: மார்ச் இறுதிக்குள் ரூ 30- விலையில் தமிழகம் முழுவதும் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனையை தொடங்கியுள்ளார். தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தும் விழா ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசுகையில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ 30-க்கு என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ஒரு பகுதியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராகவுள்ளது.
கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிப்பொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தற்போது செயல்படுத்தி வருகிறோம். மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொந்தளித்த ப சிதம்பரம்! "இதை விட விவசாயிகளுக்கு எதிரான விஷயம் எதுவும் இல்லை"
21 ஆண்டுகளாக இந்த முயற்சியில் போராடி வருகிறேன். 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருள்களை சேமித்து வைத்துள்ளேன். விவசாய முறையில் மூலிகையை விளைவிக்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 20, டீசல் ரூ 24-க்கு விற்பனை செய்யவுள்ளேன் என தெரிவித்தார்.