சாத்தூரில் மழைநீரில் மறைந்திருந்த பள்ளத்தில் கைக் குழந்தைகளுடன் விழுந்த இரு பெண்களால் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் அவ்வழியாக கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்த இரு பெண்கள் அடுத்தடுத்து அந்த பாலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் வடிகால் அமைத்தல், சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சாத்தூர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினமும் சாத்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாத்தூர்- மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடை அருகே 3 பெண்கள் கைக் குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளம் வெளியே தெரியாத நிலையில், அதில் கால் வைத்தவுடன் கைக் குழந்தையுடன் வந்த பெண் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற பக்கத்தில் உள்ள இன்னொரு பெண் சென்ற போது அவரும் தவறி பள்ளத்தில் விழுந்தார்.
இதையடுத்து அங்கு கடைகளில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர். இந்த காட்சிகள் அங்கிருந்த கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இது வைரலாகி வருகிறது. அந்த பள்ளம் தோண்டப்பட்ட இடம் மழை நீரில் மூடியிருப்பதால் அங்கு எச்சரிக்கை பலகையாவது வைத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications