சீமான், அண்ணாமலை பேச்சு வெறும் விளம்பரம்.. எம்பி மாணிக்கம் தாகூர் ஓபன்
விருதுநகர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி வருகின்றனர். விளம்பரத்துக்காக பேசி வருகின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேட்ச் ஃபிக்சிங் செய்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
வெறும் விளம்பரத்துக்காக சீமானும், அண்ணாமலையும் பேசி வருகின்றனர். தமிழக மக்களுக்கு அண்ணாமலை மற்றும் சீமானின் பேச்சுகள் போரடித்து விட்டன. நாம் தமிழர் கட்சியை சீமான் கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்து விடலாம். தொடர்ந்து, பாஜகவின் கொள்கைகளைத்தான் சீமான் பேசி வருகிறார். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளைப் பேசி வருகின்ற சீமான் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். சீமான், அண்ணாமலை செய்வதைப் போல இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்டப் பேரவையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
கேள்விகள் கேட்க வேண்டிய நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கட்சியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளும் கேள்வியை எழுப்பி வருகின்றன. நல்ல காரியங்களைச் செய்தால் தமிழக அரசைப் பாராட்டுவோம். அதே சமயத்தில் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் எங்களது கடமைதான்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்விகளை எழுப்பின. இந்த சம்பவத்தில் திமுக அரசும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை ஒரே நாளில் கைது செய்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கில் குற்றவாளிகளை 11 நாட்களுக்குப் பின்னர் தான் காவல்துறை கைது செய்தது என்று குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்கு எதிரான சட்ட மசோதா வரவேற்கக்கூடியதாகும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications