அடுத்த அதிர்ச்சி! சிவகாசியில் +1 படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் தீவிர விசாரணை
விருதுநகர்: தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாணவி மரணமே இன்னும் ஓயாத நிலையில், அடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பள்ளி படிக்கும் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி பள்ளியில் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிவகாசி
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னரே, அடுத்தடுத்து மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் +1 மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி தற்கொலை
தற்கொலை சிவகாசியில் அய்யம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று வழக்கம் போலப் பள்ளி சென்று திரும்பி உள்ளார். 17 வயதான அந்த மாணவி பள்ளியில் இருந்து திரும்பிய நிலையில், பள்ளிச் சீருடை உடனேயே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார்
மாணவி தூக்கிட்டுக் கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவி உடலை மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணையையும் போலீசார் தொடங்கி உள்ளனர்.

கோரிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார். அதேபோல கடலூர் விருத்தாசலத்தில் +2 படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார். இப்படிக் கடந்த இரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது நான்காவது நிகழ்வாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
(சிவகாசியில் மற்றொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை)












Click it and Unblock the Notifications