அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு
அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என சரத்குமார் அறிவித்துள்ளார்
விருதுநகர்: சிஏஏ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்தான் வன்முறையை தூண்டிவிடுகின்றன என்று குற்றஞ்சாட்டிய சரத்குமார், இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அதிமுகவுடன் தங்கள் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.. மணமக்களை ஆசீர்வதித்த அவர் வாழ்த்து கூறினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சிஏஏ உள்ளிட்ட பிரச்சனைகள் முதல் நடிகர் சங்க விவகாரம் வரை பேசினார்.
"குடியுரிமை சட்டம் தொடர்பான 1958-ம் ஆண்டு சட்ட திருத்தத்தையும், இப்போதைய திருத்தத்தையும் நன்றாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்... இதில், எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து ஏதும் சொல்லப்படவில்லை.
குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று எதுவும் சொல்லப்படவில்லை.அதே சமயம், அமைதி பூங்காவாக திகழும் நம் நாட்டில் வன்முறை எந்த ரூபத்தில் நடந்தாலும் அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்... இங்கு வன்முறை தூண்டப்படுவதாகவே நான் பார்க்கிறேன்... காரணம், எதிர்க்கட்சிகள்தான்.. இவர்கள் தவறான அரசியல் நோக்கத்தோடு சதி செய்து போராட்டத்தை தூண்டி விடுகின்றன.. இது ஏற்று கொள்ள முடியாதது... இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
தமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக உள்ளது.. தமிழிசை சவுந்தராஜன் தாக்கு
Recommended Video
நாங்கள் இப்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... அதனால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி தொடரும்" என்றார்.
தொடர்ந்து இந்தியன்-2 ஷூட்டிங்கில் நடந்த விபத்து பற்றி சொல்லும்போது, "அது ஒரு விபத்துதான்... அதற்காக படப்பிடிப்பு நிறுவனத்தை மொத்தமாக குற்றம் சொல்லக்கூடாது... சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி எல்லா காட்சிகளுக்கான ஷூட்டிங்கின்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.. ஹீரோ முதல் அந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் சாதாரண ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு தர வேண்டியது அவசியம் ஆகும்" என்றார்.