கடும் மனஉளைச்சல்.. கவுன்சிலிங் தந்தும் பயனில்லை.. எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் அனுபவித்த வேதனை!
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது. இதனால் அந்த கர்ப்பிணி பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டார்.
தற்போது அவர் மதுரை ராஜாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

பரிதாபம்
கடந்த 4 நாட்களாக அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

பெரிய மனவருத்தம்
இந்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை படித்து பெரிய மன வருத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த பெண் பாதிக்கப்பட்டது குறித்து இவர் அடிக்கடி விசாரித்ததாகவும், தொடர்ந்து அது பற்றி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சை
அதேபோல் மருத்துவர்கள் இவருக்கு மனஉளைச்சலுக்காக சிகிச்சையும் அளித்து இருக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக இவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மனஉளைச்சலை போக்க சிகிச்சை அளித்துள்ளனர். இரண்டு மருத்துவர்கள் இவருக்கு கவுன்சிலிங் கொடுத்து இருக்கிறார்கள்.

நடக்கவில்லை
ஆனால் என்ன பேசியும், கவுன்சிலிங் கொடுத்தும் இவர் மனநிலை சரியாகவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு தான் காரணமாகிவிட்டதாக குற்ற உணர்ச்சியில் புழுங்கியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மருத்துவமும் பலனளிக்காமல் அவர் பலியாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications