பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி.. உளுந்து விலை எப்போது குறையும்!
விருதுநகர்: ஜனவரி 1 முதல் பயறு மற்றும் பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தள்ள நிலையில் வரும் வாரங்களில் விருதுநகர் மார்க்கெட்டில் பயறு பருப்பு விலைகள் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக உள்நாட்டில் உளுந்து, துவரை, பாசிப்பயறு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இறக்குமதிக்கு மத்திய அரசு உடனே அனுமதிக்கவில்லை, இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்தது.

இந்நிலையில் மத்திய அரசு 1.50லட்சம் டன் உளுந்து இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் பாசிப்பயறு இறக்குமதிக்கும் அரசு அனுமதி அளிக்க உள்ளது. இந்த பயிர்களை இறக்குமதி செய்து துறைமுகம் வருவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு மேல் ஆகிவிடும்.
எனவே தற்போதைக்கு உளுந்து பாசிப்யிறு விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். இது ஒருபுறம் எனில் பாமாயில் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. முன்பு பாமாயில் 15 கிலோ டின் 10 ரூபாய் அதிகரத்து 1320க்கு விற்பனையாகிறது. அதேநேரம் கடலை எண்ணெய் விலை விற்பனை மந்தம் காரணமாக 50 ரூபாய் சரிந்து 2150க்கு (15 கிலோ) விற்பனையாகிறது.தைப்பொங்கல் பண்டிகை தேவைக்கான பாசிப்பருப்பு இல்லாத நிலையில் பாசிப்பருப்பு விலை உயரும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்துவிலை 100 கிலோ 8500க்கு(லயன் பிராண்ட்) விற்பனையாகிறது. லோக்கல் 8000 ரூபாய்க்கும், பருவட்டு ரகம்8300க்கும், பர்மா உளுந்து 7900க்கும், உளுந்தம் பருப்பு நாட்டு உளுந்து 12000க்கும் விற்பனையாகிறது. பாசிப்யறு வகைகளின் விலை 100 கிலோவுக்கு தற்போது 4500 (டேமேஜ்) முதல் 9700 (மகாராஷ்டிரா) வரை விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications